
Non-brahmin archakar
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமமாகத்தானே இருக்க முடியும்? அப்படியென்றால், ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அந்த ஆண்டவன் குடியிருக்கும் கோயிலுக்குள் சென்று வழிபடுவதற்கு சமமான உரிமையற்றவர்களாக சாதிகள் அவர்களைத் தடுத்து வைத்திருந்தன.
கோயில் கருவறைக்குள் சென்று, சாமிக்கு அபிஷேகம் செய்து, ஆராதனை செய்யும் உரிமை குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே உண்டு. அதற்கடுத்த சாதிப்பிரிவினர் அர்த்த மண்டபம் வரை செல்லலாம். மற்ற சில சாதிகள் கோயில் கொடிமரம் அருகிலேயே நின்று சாமி கும்பிட்டுத் திரும்ப வேண்டும். இன்னும் சிலருக்கு கோயில் இருக்கும் தெருவிலேயே நடக்க அனுமதி கிடையாது. அவர்கள் தூரத்திலிருந்து கோயில் கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று சொல்லி, அவர்களை நம்பவைத்து, உரிமையை மறுக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக நீடித்தன.
கேரளாவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்ட வைக்கம் மகாதேவசாமி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் சில சாதிகளைச் சேர்ந்தவர்கள் நடக்கவே அனுமதிக்கப்படாத நிலையில், அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினரும், மக்களுக்கான உரிமைக்காகப் பாடுபடுபவர்களும் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் ஈ.வெ.ரா அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். சிறைவாசம் அனுபவித்தபோதும் போராட்டம் ஓயவில்லை. காந்தியடிகள் வரை இந்த விவகாரம் சென்றது. ஓராண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு, கோயில் தெருக்களில் அனைத்து சாதியினரும் நடப்பதற்கு அனுமதி கிடைத்தது.
நூறாண்டுக்கு முன் நடந்த இந்தப் போராட்டத்தின்போதே, இதுவரை அனுமதிக்கப்படாத சமூகத்தினர் இனி கோயிலுக்குள் நுழையவும் உரிமை கேட்பார்கள் என பழமைவாதிகள் தெரிவித்தனர். காலம் பழமையைத் தூக்கி எறிந்து, புதுமைக்கு வழிவகுக்கக்கூடியது. கோயிலுக்குள் மட்டுமல்ல, கோயில் கருவறைக்குள்ளும் நுழைந்து பூசை செய்கின்ற உரிமை அனைத்து சாதியினருக்கும் வேண்டும் என்ற போராட்டம் 1970கள் முதல் தமிழ்நாட்டில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. அதற்கான சட்ட வழிகளை கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு மேற்கொண்டது. ஆனால், ஆகம நெறிமுறைகளை முன்வைத்து நீதிமன்றங்கள் மூலம் தடை பெறுகின்ற செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
2006ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆகமப் பயிற்சிப் பள்ளிகளும் அமைக்கப்பட்டன. கோயில் பூசைக்கேற்ற மந்திரங்கள் ஆகியவை முறைப்படி கற்றுத்தரப்பட்டன. சைவக் கோயில் ஆகமங்கள், வைணவக் கோயில் ஆகமங்கள் இவற்றை கருத்தில்கொண்டு அனைத்து சாதியினருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 200க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சிப் பெற்றனர். ஆனால், அவர்கள் அர்ச்சகராக முடியாதபடி, தாங்கள்தான் கோயிலுக்குள் அர்ச்சகர் செய்ய கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என நினைத்துக்கொண்டிருப்போர் உச்சநீதிமன்றம் வரை சென்றனர். ஒரு சில தடைகள் நீக்கப்பட்டு, 2018ல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் நிர்வாகத்துக்குட்பட்ட ஒரு கோயிலில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.
2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஆட்சியின் நூறாவது நாளான ஆகஸ்ட் 14 அன்று மயிலை கபாலீஸ்வரர் கோயில் மண்டபத்தில் நடந்த விழாவில் ஆகமப் பயிற்சிப் பெற்ற அனைத்து சாதியினரைச் சேர்ந்தவர்களுக்கு அர்ச்சகருக்கான பணி ஆணைகளை வழங்கினார். பெண் ஓதுவார்களும் முதன்முறையாக நியமிக்கப்பட்டனர். எனினும், இந்த நிலை தொடர முடியாதபடி வழக்குகள் நீடித்தன. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களும் இந்த வழக்கில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, உரிமைக்கான சட்டப்போராட்டத்தை மேற்கொண்டனர்.
2025 மே 14ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில், ராமேஸ்வரம் கோயிலில் நிரப்பப்படாமல் உள்ள அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்று தெரிவித்ததுடன், ஆகமக் கோயில்கள்-ஆகமம் அல்லாத கோயில்கள் எவை எவை என்று வரையறை செய்ய குழு அமைத்து 3 மாதங்களில் அறிக்கை தர வேண்டும் என்றும், ஆகமம் அல்லாத கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஆகமக் கோயில்களில் அந்த வாய்ப்பை வழங்கும் உத்தரவைப் பிறப்பிக்கவில்லை.
ஆகமம் என்பது என்ன? அதை உருவாக்கியவர்கள் யார்? அதன் பெயரால் ஒரே மதத்தைச் சேர்ந்த மற்ற சாதியினர் அர்ச்சகராவது தடுக்கப்படுவது ஏன்? குறிப்பிட்ட சாதியினரே பூசை செய்யத் தகுதியுள்ளவர்கள் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணில்லையா? எனப் பல கேள்விகள் உள்ளன.
இந்தக் கேள்விகளுக்கு நியாயமான பதில்களுடன் ஆகமத் தீண்டாமை அகற்றப்படுமா?
hx1vvk