
நாற்காலிக்கு வந்த குடைச்சல், உறவினர் வீட்டு ரெய்டு என்று அடுத்தடுத்த கவலைகளுடன் சிங்கப்பூர் பறந்திருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் சுகுமார், துறைமுக கட்டுமானத்தில் மோசடி செய்ததாக துறைமுக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவில் உள்ள சுகுமார் வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தி அதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் புகாரளித்திருந்தார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி. 2021 சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றவர் அந்த கட்சி வேட்பாளருக்கு எதிராகவே நின்று எம்.பி. தேர்தலில் போட்டியிட்டது அரசியலமைப்புச் சட்டம் 10ஆவது அட்டவணை பிரிவு 2/1க்கு எதிரானது. ஆகவே, ஓ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு புகார் அளித்திருக்கிறார்.
இதனால், முதல்வர், துணை முதல்வர், நிதி அமைச்சர் பொறுப்பு எல்லாம் வகித்து வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு எம்.எல்.ஏ. பதவியும் இல்லாமல் போகும் நிலை வந்துவிட்டதா? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கவலையில் இருந்தது.

அதிமுக சார்பில் கொறடாவோ, நிர்வாகிகளோ புகாரளிக்கா விட்டாலும் கூட, தொகுதியைச் சேர்ந்தவர் புகார் அளித்திருப்பதால் இந்த புகார் குறித்து ஆய்வு செய்து பேரவை விதிப்படியும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.
ஆனாலும், அதிமுக அதிகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும் என்று தகவலும் பரவுகிறது.

பதவிக்கு வந்த திடீர் பங்கம், உறவினர் வீட்டு ரெய்டு என்று அடுத்தடுத்து தலைவலி அதிகமானதானோ என்னவோ தெரியவில்லை, மருத்துவர் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று சொல்லி ஒருவாரம் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.