அண்டார்டிகா (Antarctica) என்றாலே கண்முன் தோன்றுவது முடிவற்ற வெள்ளை பனிப்பரப்பு, கடும் குளிர் மற்றும் உயிரற்ற நிலம் ஆகும். ஆனால் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்பு, இந்தக் கற்பனையை முற்றிலும் உடைத்தெறிந்துள்ளது. அதாவது, அண்டார்டிகாவின் 2,000 மீட்டர் தடிமனான பனிக்கட்டியின் அடியில், சுமார் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (34 million year old forests) செழித்து வளர்ந்த காடுகளின் தடயங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியின் வரலாற்றில் ஒரு மறக்கப்பட்ட பசுமையான அத்தியாயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
பனிக்கட்டிகளுக்குள் மறைந்த அறிவியல்
இந்தக் கண்டுபிடிப்பு சாதாரணமாக நிகழ்ந்தது அல்ல. அதாவது கடும் குளிரும், பலத்த காற்றும் நிறைந்த சூழலில், விஞ்ஞானிகள் சிறப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பனிக்கட்டியை ஆழமாகத் துளைத்தனர். இதனைத்தொடர்ந்து, இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட மண் மற்றும் சேறு மாதிரிகள், முதலில் சாதாரணமாகத் தோன்றினாலும், ஆய்வகத்தில் மைக்ரோஸ்கோப்பின் கீழ் அவை ஆராய்ச்சி செய்யப்பட்டபொழுது, பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.என்னவெனில், அந்தச் சேற்றில் பழங்கால மகரந்தத் துகள்கள், இலைகளின் சிதைவுகள் மற்றும் நுண்ணுயிரிகளின் தடயங்கள் அதில் இருந்துள்ளன.
ஒருகாலத்தில் பசுமையான அண்டார்டிகா
இந்த ஆதாரங்கள் சொல்லும் உண்மை அதிர்ச்சிகரமானது. என்னவெனில், இன்று உறைந்த பனிப்பாலைவனமாக இருக்கும் அண்டார்டிகா, ஒருகாலத்தில் ஆறுகள் ஓடிய, சதுப்பு நிலங்கள் நிறைந்த, அடர்ந்த காடுகள் சூழ்ந்த நிலப்பரப்பாக இருந்துள்ளது. அப்போது அண்டார்டிகாவின் காலநிலை, இன்றைய வெப்பமண்டலக் காடுகளைப் போன்றே ஈரமும் வெப்பமும் கொண்டதாக இருந்திருக்கிறது. அந்தப் பசுமையான சூழலில் பல்வேறு தாவரங்களும், நுண்ணுயிரிகளும் இணைந்து ஒரு நிலையான உயிர்ச்சமூகமாக வாழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்றம் சொல்கின்ற பாடம்
இந்தக் கண்டுபிடிப்பு கடந்த காலத்தைப் பற்றி மட்டுமல்ல, நமது நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றியும் ஒரு முக்கிய எச்சரிக்கையை அளிக்கிறது. அதாவது, பூமியின் வெப்பநிலை மாற்றமடைந்தபோது, பசுமையாக இருந்த அண்டார்டிகா மெதுவாகப் பனிக்கட்டியால் மூடப்பட்டது. தொடர்ந்து, இயற்கையான காலநிலை மாற்றம் ஒரு முழுக் கண்டத்தின் தோற்றத்தையே மாற்றியமைத்தது. இன்று மனிதர்களின் செயல்பாடுகளால் பூமி வேகமாக வெப்பமடைந்து வரும் நிலையில், இதன் எதிர்மறை விளைவுகள் எவ்வளவு பெரிதாக இருக்க முடியும் என்பதற்கான சான்றாக இந்தப் பழைய காடுகள் விளங்குகின்றன.
பனிக்கடியில் இருந்து எதிர்காலத்துக்கான எச்சரிக்கை
அண்டார்டிகாவின் பனிக்கட்டியின் அடியில் மறைந்துள்ள அந்த 34 மில்லியன் ஆண்டுகள் பழமையான காடுகள், பூமி எவ்வளவு மாறக்கூடியது என்பதை நினைவூட்டுகின்றன. இன்று உறைந்திருக்கும் பனிப்பாறைகள் (Glaciers) உருகினால், கடல் மட்டம் உயர்ந்து உலகின் பல பகுதிகள் பாதிக்கப்படலாம். மேலும், அந்தப் பழைய சேறு மாதிரிகள், கடந்த காலத்தின் நினைவாக மட்டுமல்ல, எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் மனிதகுலத்தின் முன் வைக்கின்றன.
