
வெள்ளைக்காரர்கள் எனப்படும் பிரிட்டிஷ்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுதான் கிரிக்கெட். அங்குள்ள பிரபுக்கள், சீமான்கள் இந்த விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினார்கள். தங்களிடமுள்ள வேலைக்காரர்களையும் விளையாட்டில் ஈடுபடுத்தினார்கள். விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பந்தயம் கட்டும் சூதாட்டத்தையும் உருவாக்கினார்கள். பின்னர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எந்தெந்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்தினார்களோ அங்கெல்லாம் கிரிக்கெட்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இந்தியாவும் கிரிக்கெட்டில் புகழ் பெற்றது.
கருப்பின மக்கள் அதிகம் வாழும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆதிக்கம் 20ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது. இந்தியாவின் தந்தை எனப்படும் காந்தி தென்னாப்பிரிக்காவில்தான் இந்த நிறவெறியை எதிர்த்து தனது முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார். அவருடன் இந்தியர்கள் பலர், குறிப்பாகத் தமிழர்கள் அந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். ஆனாலும், நிறவெறி ஆதிக்கத்தை அங்கிருந்த வெள்ளையராட்சி விடவில்லை. கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். இத்தகைய உலக நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், விளையாட்டிலும் அது எதிரொலித்து, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த வெள்ளையர்களும், இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்கா சென்ற வெள்ளையர்களும் கிரிக்கெட்டில் புகழ் பெற்றிருந்தனர். அத்தகைய வீரர்களை ஆஸ்திரேலியாவின் ஊடக முதலாளி பாக்கர் என்பவர் தன் நாட்டுக்கு அழைத்து, தனித்தனி அணிகளை உருவாக்கியும், உலகின் பிற நாட்டு அணி வீரர்களை விலைக்கு ஒப்பந்தம் செய்து அணிகளை உருவாக்கியும், தனியாகப் போட்டிகளை நடத்தினார். இதற்கு ஐ.சி.சி. எனப்படும் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்காவிட்டாலும், 1970களின் இறுதியில் பாக்கர் உருவாக்கிய அணிகளுக்கிடையிலானப் போட்டிகள் நடைபெற்றன.
1990ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டு, நிறவெறி ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாகி, நெல்சன் மண்டேலாவே முதல் ஜனாதிபதியானார். சர்வதேச அளவிலான தடைகள் விலகியதால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி நீண்டகாலத் தடைக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டது. ஆனால், அணியில் இருந்த பெரும்பாலான ஆட்டக்காரர்கள் வெள்ளையர்கள்தான். கருப்பின மக்கள் அதிகமுள்ள நாட்டில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் கிரிக்கெட்டில் இல்லை. இதுபோலவே ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே அணியில் இருந்த பல வீரர்களும் வெள்ளையர்களாகவே இருந்தனர்.
சர்வதேச அளவிலான ஐந்து நாட்கள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆட்டம் மற்ற பெரிய அணிகளைத் திணறடிக்கும் வகையில் இருந்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் திறமையை வெளிப்படுத்தினர். இறுதிப் போட்டி வரை தென்னாப்பிரிக்க அணி சவால் மிகுந்ததாக இருந்தது. எனினும், எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி கோப்பையை வென்று சாம்பியனாகவில்லை. இறுதிப் போட்டிக்கு தென்னப்பிரிக்க அணி வந்தாலே எதிரணிக்குத்தான் கோப்பை என்கிற அளவிற்கு கிரிக்கெட் ரசிகர்களின் மனநிலை உருவாகிவிட்டது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின்படி, அணியின் 11 பேரில் இத்தனை பேர் கருப்பின வீரர்களாக இருக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு, அதன்படி கருப்பின வீரர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. இதை இந்தியாவில் உள்ள கிரிக்கெட் விமர்சகர்கள் உள்பட பலர் எதிர்மறையாக விமர்சித்தனர். திறமைக்குப் பதில் ‘கோட்டா’ முறையா எனக் கேள்வி கேட்டனர். இந்திய கிரிக்கெட் அணியில் கோட்டா இல்லை. அது முழுக்க முழுக்க சாதி மற்றும் அதிகார செல்வாக்கு சார்ந்தது. இதில்தான் கபில்தேவ், தோனி போன்றவர்கள் எதிர்நீச்சல் போட்டு இந்திய அணிக்குத் தலைமை தாங்கி உலகக் கோப்பையை வென்று தந்தனர்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனான டெம்பா பவுமா என்ற கருப்பினத்தவர் உயரத்திலும் குறைவாக இருந்ததால் அவரை ஏளனமாகவே விமர்சித்தனர். அவரையும் அணியில் இருந்த மற்றவர்களையும் கோட்டா வீரர்கள் என்று ஏளனம் செய்தார்கள். எனினும், இந்த விமர்சனங்களைக் கடந்து டெம்பா பவுமாவும் கருப்பின வீரர்களும் அணியில் இருந்த வெள்ளை வீரர்களுடன் இணக்கமாகவே விளையாடினர்.
2025 சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடரில் தென்னாப்பிரிக்காவின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இறுதிப் போட்டி, கிரிக்கெட்டின் புனித மைதானமாகக் கருதப்படும் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்று கோப்பையையும் வென்று தந்துள்ளார் டெம்பா பவுமா. அணியின் சக ஆட்டக்காரர்களை ஊக்கப்படுத்தி, தன்னுடைய உயரத்தைப் பொருட்படுத்தாமல் தென்னாப்பிரிக்க அணியை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார். விளையாட்டில் சமூக நீதி தேவைப்படுவதையும், அது வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதையும் தென்னாப்பிரிக்க அணி நிரூபித்துள்ளது. வெள்ளை வைரங்கள் மின்னிய கிரிக்கெட் கோப்பைகளில் கருப்பு வைரம் மின்னி மிளிர்கிறது.