
சுயாதீன மற்றும் சினிமா ராப் பாடகராக இருந்த வேடன், இன்று நாடு முழுவதும் ஒரு தரப்பினரால் ஆதரிக்கவும் மற்றொரு தரப்பினரால் எதிர்க்கவும் படுகிறார். எதற்காக இந்த ஆதரவும் எதிர்ப்பும்.
ஈழத் தமிழரான இவரது தாய் பிழைப்பிற்காக ஊட்டிக்கு வந்துள்ளார். பிறகு கேரளா, திருச்சூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டாவதாகப் பிறந்த குழந்தைதான் இந்த வேடன்.
ஹரிந்தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவரை, சிறு வயதில் இவரது மீன் பிடிக்கும் திறனைக் கொண்டு நண்பர்கள் வேடன் என அழைக்க. பின் நாட்களில் அதுவே இவரது பெயராகிப்போனது. திருச்சூர் அருகில் உள்ள ஸ்வப்னபூமி என்ற பகுதியில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்ததும், பொருளாதார சூழ்நிலைக் காரணமாக வேலைக்குச் சென்றுள்ளார். தனது பாடல்களால் அங்கிருந்தவர்களைக் கவர்ந்து, பின்னர் எடிட்டர் பி.அஜித்தின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு ராப் பாடகர்களின் அறிமுகத்தின் மூலம் இவரும் ராப் பாடல்களை எழுதிப் பாடத் தொடங்கியுள்ளார்.
அப்படி இவர் 2020ல் “நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல…” என்ற வரிகளுடன் வெளியிட்ட ’Voice of voiceless’ என்னும் ஆல்பம் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் பல சினிமா வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன. 2023-ம் ஆண்டில், சர்வதேச விருது வென்ற ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தில் ‘கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்’ பாடலை எழுதிப் பாடியது குறிப்பிடத்தக்கது.மேலும், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில் இவர் பாடிய ’குத்தந்திரம்’ என்னும் பாடல் இவரை இன்னும் பிரபலமடையச் செய்தது.
சினிமா பாடல்களைக் காட்டிலும் சுயாதீனமான பாடல்களை எழுதி பாடுவதே இவரது பிரதான விருப்பமாக இருந்துள்ளது. இவரது பெரும்பாலான பாடல்கள் சமூக நீதி, ஜாதி, நிற, மத பேதங்களுக்கு எதிராக இருந்ததையடுத்து அரசியல் ரீதியாகவும் கவனம் பெறத் தொடங்கினார்.

இந்நிலையில் வேடன் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் குறித்து அவதூறாகவும் இழிவுபடுத்தும் விதத்திலும் பாடல் பாடியதாக உள்துறை அமைச்சகத்திற்குப் பாலக்காடு நகராட்சி பாஜக கவுன்சிலர் விஎஸ் மினிமோல் புகார் அளித்திருந்தார். மேலும் அவரது புகாரில், வேடனின் தாய் இலங்கைத் தமிழர், இவரும் தமிழீழ ஆதரவாளர். எனவே இவரைத் தேசிய புலனாய்வு அமைப்பு இவரை விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, இவர் மேல் சட்டை இன்றி பாடுவதால் சமூக சீர் கேடு நிகழ்கிறது என்றும் ராப் பாடலுக்கும் பட்டியலின மக்களுக்கும் தொடர்பில்லை என்றும் வலதுசாரிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, ’ஜனநாயகத்திற்கும் தீவிர இந்துத்துவ வாதத்திற்கும் இந்த தொடர்பும் இல்லை’ என வேடன் பதில் அளித்தது வலதுசாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க, கேரள கம்யூனிஸ்ட் அரசின் 4-ம் ஆண்டு நிறைவு விழாவில் பாடல் பாடுவதற்காக வேடன் அழைக்கப்பட்டு இருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். மேலும், புலிப் பல் அணிந்திருந்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பிறகு இவ்வழக்குகளிலிருந்து வேடனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், வேடன் மீது Me too குற்றம் சுமத்தப்பட்டது. அதற்கு அவர், ‘நான் நடந்துகொண்ட விதம் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியதை நினைத்து அவமானப்படுகிறேன். அதற்காக உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தனது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். அந்த விவகாரத்தை மீண்டும் வலதுசாரிகள் கையில் எடுத்து வேடனை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
மறுபுறம், அரசியல் உள்நோக்கத்திற்காகவே வேடன் மீது வலதுசாரிகள் இத்தகைய ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.