
ஆளுநரின் அதிகாரம் குறித்த தமிழ்நாடு அரசின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை நிராகரிப்பதற்கான வீட்டோ பவர் ஆளுநருக்கு கிடையாது என்பதையும், சட்டமசோதாக்களுக்கு ஏற்பளிக்காததும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததும் சட்டவிரோதம் என்றும் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசின் வழக்கில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர்களின் அதிகாரத்திற்கு கடிவாளம் போட்டிருக்கிறது.
இந்தத் தீர்ப்பின்போது, ‘மிக விரைவில்’ ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்கிற அரசியல் சட்டப் பிரிவின் அடிப்படையில், அந்த மிக விரைவில் என்பதற்கான கால வரையறையைத் தெளிவாக்க வேண்டிய அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், ஜனாதிபதியிடம் ஒரு மசோதா எவ்வளவு காலத்துக்கு இருக்கலாம் என்பது குறித்தும் காலவரையறை செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் சார்ந்த தீர்ப்புகளில் இந்தத் தீர்ப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அதிர்வும், மாநில அரசுகளுக்கு அது தந்துள்ள நம்பிக்கையும் விவாதிகக்கப்பட்டு வரும் நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவு மேலும் பல நம்பிக்கைகளை உருவாக்கி, இந்தியாவை ஆளுந்தரப்புக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
முஸ்லிம் அமைப்புகளின் சொத்துகளை நிர்வகிப்பது வக்ஃப் வாரியம். இந்தியா முழுவதும் இதற்கு சொத்துகள் உள்ளன. அதனால், வக்ஃப் சொத்துகள் மீது மத்திய பா.ஜ.க. அரசு ஆதிக்கம் செலுத்தும் முடிவுடன் வக்ஃப் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்தது. இதற்கு நாடாளுமன்றத்தில், பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளிடமிருந்தே எதிர்ப்பு வந்தபோது, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டது. வக்ஃப் சட்டத் திருத்தம் தேவையற்றது என்பதை குழுவில் இருந்த மற்ற கட்சி உறுப்பினர்களும், முஸ்லிம் அமைப்பினரும், பொதுவான அமைப்பினரும் தெரிவித்தபோதும், பா.ஜ.க. அதனைப் புறந்தள்ளி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தால் அதனை நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்ததால் வக்ஃப் திருத்த மசோதா, புதிய சட்டமாக ஆனது.
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பா.ஜ.க.வின் நோக்கத்திற்கு சாதகமாக இருந்த நிலையில், வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., முஸ்லிம் அமைப்புகள் என நூற்றுக்கும் அதிகமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் சில முக்கியமான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், பா.ஜ.க. அரசின் வழக்கறிஞரை நோக்கிப் பல கேள்விகளை எழுப்பியது.
வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, முஸ்லிம் சொத்துகளுக்கான வக்ஃப் குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களையும் உறுப்பினராக நியமிக்கலாம். வக்ஃப் பொறுப்பில் உள்ள சொத்துகளை வேறு வகையாக அடையாளப்படுத்தலாம். இது குறித்து உச்சநீதிமன்ற விசாரணையின்போது, “இந்து கோவில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர்களை உறுப்பினராக நியமிக்க முடியுமா?” என்று உச்சநீதிமன்றம் கேட்டது. பா.ஜ.க.வின் உள்நோக்கத்தை இந்தக் கேள்வி அம்பலப்படுத்தியது. இந்த நிலையில், புதிய உறுப்பினர்கள் நியமித்தல், வக்ஃப் சொத்துகளை வகைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களை கவர்னரைக் கொண்டு கட்டுப்படுத்தும் மத்திய அரசின் போக்கிற்கும் உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டுவிட்டது. இந்தியாவில் முஸ்லிம்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்ற நினைக்கும் பா.ஜ.க.வின் மதவாத அரசியலுக்கும் வக்ஃப் திருத்தச் சட்ட நடைமுறைகளுக்கான இடைக்காலத் தடை போட்டுவிட்டது உச்சநீதிமன்றம்.
நீதியின் இந்த இரட்டைத் தாக்குதலை பா.ஜ.க அரசு எதிர்பார்க்கவில்லை. இந்தநிலையில்தான், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஒரு நிகழ்வில் பேசும்போது, இந்திய அரசமைப்பின் தலைவராக உள்ள குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு போட முடியுமா? நீதிபதிகள் தங்கள் அதிகாரத்தை அணுகுண்டு போல பயன்படுத்துகிறார்கள் என்ற விமர்சனக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்திய நீதிமன்றங்களில் நியாயத் தீர்ப்புக்கான சட்டப்போராட்டம் பல ஆண்டுகளுக்குப் பிறகே நிலைநாட்டப்படுகிறது. நாடாளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் அதிகம் குறுக்கிடுவதில்லை. அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதில்லை. எனினும், அரசியல் சட்டம் சார்ந்த விவகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிடுவதற்கான அதிகாரம் உண்டு என்பதை சட்ட நிபுணர்கள் உறுதி செய்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சி என்பது மினி எமர்ஜென்சி அல்லது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலம் போல இருப்பதால் குடியரசு தலைவருக்கு உத்தரவிட வேண்டிய சூழல் உச்சநீதிமன்றத்திற்கு அமைந்துள்ளது. இதற்காக பா.ஜ.க. தரப்பு கோபப்படக்கூடாது. வெட்கமும் வருத்தமும் படவேண்டும்.
Good https://is.gd/tpjNyL