
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கும் விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் 2010-ம் ஆண்டு சட்டத்தையும், 2020 திருத்தச் சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு, முழுமையாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கே அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர மொழிகளைப் பயிற்று மொழியாக (Medium of instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.
1-ம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.
நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும்.
அதாவது, பள்ளிக் கல்வியைப் பொருத்தமட்டில், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உயர்கல்வியைப் பொருத்தமட்டில் தொழிற்பயிற்சி நிலையம் / கல்லூரி / பல்கலைக்கழக முதல்வர் / பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும். மேற்படி சான்றிதழ்கள் பணியில் உள்ள அலுவலர்களால் மட்டும் அளிக்கப்பட வேண்டும் எனவும், ஓய்வுபெற்ற அலுவலர்களால் அளிக்கப்படக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் அல்லர்.
பள்ளிக்குச் சென்று பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள் எழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராக தேர்வெழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.
நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். அதாவது, பள்ளிக் கல்வியைப் பொருத்தமட்டில், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தனித்தேர்வைப் பொருத்தமட்டில் இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உயர்கல்வியைப் பொருத்தமட்டில் தொழிற்பயிற்சி நிலையம் / கல்லூரி / பல்கலைக்கழக முதல்வர் / பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.
கல்வித் தகுதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தெரிவு முகமைகள் (Recruiting Agencies) / பணிநியமன அலுவலர்கள் (Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களின் உண்மைத்தன்மையினை சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் பணியாளர் தெரிவு முகமைகள் (Recruiting Agencies) / பணிநியமன அலுவலர்கள் (Appointing Authorities) உறுதி செய்துகொள்ள வேண்டும்.
sv2qib
196xxs
zyb049
sloqb9
ipayls