சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் கேசவ பாண்டியன் (37), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதி தொழில் மேற்கொண்டிருந்தார். தொழிலை விரிவுபடுத்த, சிட்டி யூனியன் வங்கியில் கடன் பெற்றிருந்தார்.
2019 ஆம் ஆண்டு அக்டோபரில், கேசவ பாண்டியனின் வங்கி காசோலை அவருடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டு, ₹6.85 லட்சம் சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகளால் அவரது கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த கேசவ பாண்டியன், வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது மேலாளரிடம் மின்னஞ்சல், தொலைபேசி மூலம் புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து, நண்பர்களிடம் விசாரித்த போது, சிட்டி யூனியன் வங்கியில் இதுபோன்ற பல மோசடிகள் நடந்துள்ளன, மேலும் ஒரு பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் கிடைத்தது.
2020 ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் வங்கி அதிகாரிகள் மீது கேசவ பாண்டியன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் காமகோடி, திருச்செங்கோடு கிளையின் பொது மேலாளர் மோகன், கிளை மேலாளர் குஞ்சிதபாதம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையில், வங்கி அதிகாரிகள் கேசவ பாண்டியனுக்கு எதிராக போலி புகார் அளித்தனர். வங்கி கடனில் கேசவ பாண்டியன் இயந்திரங்களை வாங்கியதாக போலியான ஆவணங்களை சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் தயார் செய்தனர். பின்னர் அந்த இயந்திரங்களை வங்கி நிர்வாகத்திற்கு தெரியாமல் திருடி சென்று விட்டதாக சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் கேசவ பாண்டியன் மீது பொய்யான புகார் ஒன்றை திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு அளித்தனர்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த கேசவ பாண்டியன், வங்கி அதிகாரிகள் தனது குடும்பத்தினரின் கையெழுத்துகளை போலி ஆவணத்தில் பயன்படுத்தி மோசடி செய்ததாக நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கொரோனா காலத்தில், வங்கிக் கடன் மீதான தொகை செலுத்தப்படவில்லை என்ற காரணத்தால், பல கோடி மதிப்புள்ள கேசவ பாண்டியனின் சொத்துக்கள் குறைந்த விலைக்கு வங்கி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டன. இதனால், ₹25 கோடி இழப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார். இந்த வழக்கு கோவை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும், வங்கி அதிகாரிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து,
🔹 திருச்செங்கோடு கிளை மேலாளர் அரவிந்த்
🔹 கும்பகோணம் கிளை மேலாளர் குஞ்சிதபாதம்
🔹 சீனியர் மேனேஜர் கணேசன்
🔹 மண்டல மேலாளர் சுயம்புலிங்க ராஜா
உள்ளிட்ட ஆறு நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிட்டி யூனியன் வங்கி, இந்த வழக்கை விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த நீதிபதி, 2023 மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார்.
ஆனால், கேசவ பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர் மதுரம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, கடந்த வாரம், வழக்கு விசாரணையை தொடர நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், மூன்று மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். “இந்த வழக்கு சரியான முறையில் விசாரிக்கப்பட்டு நீதிமயை உறுதி செய்ய வேண்டும்” என்று கேசவ பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.