
அப்படி ஒன்றும் கமல்ஹாசன் கன்னட மொழியை குறைத்துப் பேசவில்லை. ஆனால் அவர் கன்னட மொழியை இழித்தும் பழித்தும் பேசியது மாதிரி கன்னடர்கள் கொந்தளிக்கின்றனர். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என்று வரலாற்றைச் சொன்னதற்காக கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக கன்னட பாஜக கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசன் போஸ்டர்களை கிழித்துக் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘’கன்னட சூப்பர் ஸ்டார் சிவன்னா இங்கே என் மகனாக, ரசிகனாக வந்துள்ளார். நானும் அவரை சிவன்னா என்றே அழைக்கிறேன். ஆனால் அவருக்கு நான் சித்தப்பா.
இது அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என் குடும்பம். (சிவராஜ்குமாரைப் பார்த்து) அதனாலதான் அவர் இங்கு ( சிவராஜ்குமார் ) வந்திருக்கார். அதனால்தான் பேச்சை ஆரம்பிக்கும் போதே ‘’உயிரே, உறவே, தமிழே’’ என்று ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் (கன்னடம்) பாஷை. அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்’’ என்றார்.

’’தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் மொழி’’ என்று சொன்னதற்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் கர்நாடகாவில் போராட்டம் வலுக்கிறது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கமல்ஹாசன் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்துகின்றனர்.
‘’தமிழ் உயர்ந்தது; கன்னடம் தாழ்ந்தது என்ற கருத்து கமல் பேச்சில் இல்லை. திராவிட மொழிக்குடும்பங்களின் உருவாக்க வரலாறு என்ற வரலாறுதான் இதற்குள் இருக்கிறது. இந்த பின்புலத்தில் கமல்ஹாசன் பேசியதை தவறாக புரிந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கமல்ஹாசன் சொன்னதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை’’ என்கிறார் தமிழ்த்துறை பேராசிரியர் வீ.அரசு.
’’வரலாற்று ரீதியாக நாம் எல்லாம் ஒரு திராவிட மொழிக்குடும்பம் என்று சொல்லி இருக்கிறார். தெலுங்கு மொழியில் உள்ள பழமை இலக்கியவாதிகள் கூட தமிழ்தான் மூல மொழி. அங்கிருந்துதான் நாம் என்று சொல்லி இருக்கிறார்கள். திராவிட மொழிக்குடும்பத்தில் தான் நாம் இருக்கிறோம். நமக்குள் ஒரு உறவு இருக்கிறது என்பதை நிலைநிறுத்தித்தான் அவர் பேசி இருக்கிறார். ஒரு யதார்த்தத்தை பேசி இருக்கிறார் கமல். இதை இருமாநில பிரச்சனையாக இரு மாநில யுத்தமாக மாற்றிவிட வேண்டாம் ‘’என்கிறார் திமுக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன், ’’கருத்துக்கு கருத்துதான் சரியானது. ஆனால் கர்நாடகாவில் கமலின் போஸ்டர்களை கிழிக்கின்றனர். அவர்கள் தமிழர்கள் எதிர்வினை ஆற்றினால் என்னவாகும்?
கர்நாடகாவில் மனித உரிமையில் அக்கறை உள்ளவர்கள் இதில் தலையிட்டுப் பேச வேண்டும். சில பேர் ரவுடித்தனமாக பேசுவதை/ செய்வதை ஊக்கப்படுத்துவது கர்நாடகத்தில் வழக்கமானது. காவிரி பிரச்சனையில் இனப்படுகொலை செய்த கும்பல் அது. உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்துக்காக தமிழர்களை கொன்றார்கள். 200 பேருந்துகளை கொளுத்தினார்கள். இலட்சக்கணக்கானோர் அதிகளாக ஓடி வந்தனர்.
கர்நாடகாவில் இனவெறி உச்சமாக இருக்கிறது. இதனால்தான் காலங்காலமாக பெங்களூருவில் வாழும் தமிழர்கள் தமிழ் பேச அஞ்சுகிறார்கள். தமிழர்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்’’என்கிறார்.

ஆனால் பாஜக பிரமுகர் தமிழிசை சவுந்தரராஜனோ, ‘’தமிழ் பெருமையை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறேன். ஆனால் இன்னொரு மொழியைப் பேசும்போது சற்று எச்சரிக்கை தேவை’’ என்கிறார்.
கன்னட பாஜக தலைவர் விஜயேந்திரா, ‘’கமல் பேசியது அநாகரீகமானது. அது ஆணவத்தின் உச்சம். 6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையை அழித்துவிட்டார். கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.’’ என்கிறார்.
’’தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை மொழியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். கன்னடம், மலையாளம் பேசுவோர் இந்த உண்மையை ஏற்க தயங்கலாம். ஆனால் இதுதான் உண்மை’’ என்கிறார் விசிக திருமாவளவன்.

‘’கமல் பேசியது உண்மை. சத்தியத்திலும் சத்தியம். உண்மையை உணராத கூட்டம் எதிர்க்கிறது. தன் இன வரலாற்றை அறியாத கூட்டமாக இருக்கின்றனர். கமல் சொன்னது சரியானது என்று அங்குள்ள வரலாற்று அறிஞர்களும் அறிவர். தெரியாத கூட்டம் செய்யும் பிழைதான் இது’’ என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

’’கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியவில்லை. வரலாறு தெரியாமல் கமல் பேசுகிறார்’’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கர்நாடகாவில் கமலுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் அதே வேளையில் தமிழ்நாட்டில் கமலுக்கு ஆதரவு வலுத்து வருகிறது.
la916y