
த.வெ.க.வுக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் வருவார் என்றார்கள். அவர் வருவதற்கு முன், பணியிலிருந்து விருப்ப ஓய்வு கொடுத்துவிட்ட ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் வந்து சேர்ந்து, கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராகிவிட்டார். நடிகர் விஜய்க்காக சைக்கிளில் ஊரெல்லாம் சுற்றி, போஸ்டர் ஒட்டிய ரசிகர்களுக்குத்தான் த.வெ.க.வில் பதவி என்றும், திடீரென்று காரில் வந்து இறங்குபவர்களுக்குப் பதவி இல்லை என்றும் கட்சியின் ஒரிஜினல் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேடையில் முழங்கியது விஜய் ரசிகர்களின் நினைவுக்கு வந்தாலும், எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் இதுதான் அரசியல்.
ஆதவ் அர்ஜூனாவும் இப்படித்தான் திடீரென காரில் வந்து இறங்கி, கட்சியில் பதவியைப் பெற்று, மேடையில் விஜய்க்கு நேரம் கொடுக்காத அளவுக்குப் பேசித் தீர்க்கிறார். கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் ஏற்கனவே ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளில் பணியாற்றி, ரெய்டுகளுக்குச் சென்றவர். வருமானவரி விவகாரம் தொடர்பாக விஜய்க்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டுகள் பற்றியும் அறிவார். அவர் என்ன கொள்கையைப் பரப்பப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.
த.வெ.க. தன்னுடைய அரசியல் எதிரி தி.மு.க என்றும், கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும் அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க. அரசுடன் நெருங்கிய தொடர்புடையவரான அருண்ராஜ், கொள்கை எதிரியான பா.ஜ.க.வை எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வியும் எழுந்தது. த.வெ.க. தன்னுடைய கொள்கைத் தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை முன்னிறுத்தியுள்ளது. இவர்களில் எத்தனை பேரை த.வெ.க.வின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அறிவார், அவர்களைப் பற்றி எந்தளவில் தொண்டர்களிடம் பேசுவார், த.வெ.க.வின் கொள்கைப் பற்றி பொதுமக்களிடம் எப்படி விளக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓர் ஊடகடத்திற்குப் பேட்டி அளித்துள்ளார் அருண்ராஜ்.
அதில் அவர் சொன்ன முக்கியமான கருத்து, சட்டமன்றத்திற்கு எம்.எல்.ஏ.க்களைத் தேர்ந்தெடுக்கத் தனித் தேர்தலும், முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கத் தனித் தேர்தலும் நடத்தப்படும் என்பதுதான். அதாவது, அவரவர் தொகுதிக்கான எம்.எல்.ஏ.வை மக்கள் தேர்ந்தெடுப்பதுபோல, தங்களுக்கான முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க, அருண்ராஜ் வார்த்தையில் சொல்வதென்றால், தமிழ்நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுக்க தனித் தேர்தல் நடத்தப்படும் என்கிறார். அதாவது, முதலமைச்சரான அதிபர் த.வெ.க.தலைவரா? தி.மு.க தலைவரா? என்று மக்கள் நேரடியாக வாக்களிப்பார்களாம்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒருவர் அதிபர் என்ற கனவில் தொடர்ந்து கட்சியை நடத்தி, ஒரு தேர்தலிலும் ஒரு சீட்டும் ஜெயிக்காவிட்டாலும், கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், அவருக்கு டஃப் கொடுக்கக்கூடிய முறையில் த.வெ.க. தன்னுடைய கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் மூலம் அதிபர் தேர்தல் பற்றிப் பேச வைத்திருக்கிறது. அருண்ராஜ் சொல்லும் கருத்துப்படி பார்த்தால் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்குத் தனித் தேர்தலும், பிரதமருக்குத் தனித் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். இதை த.வெ.க. செய்ய முடியாது. நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் அவற்றை முடிவு செய்வது தலைமைத் தேர்தல் ஆணையம்தான். அது முழுக்க முழுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நாடறியும்.
அருண்ராஜ் என்பவர் ஒன்றிய அரசில் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு குறைந்தபட்ச தேர்தல் அறிவு இருக்கும் என்றுதான் த.வெ.க. தலைவர் விஜய்யும் நம்பியிருப்பார். ஆனால், கட்சித் தலைவரையே ஏமாற்றக்கூடிய அளவுக்கு கப்சா விட்டிருக்கிறார் அருண்ராஜ். இரண்டு தேர்தல்கள் அவசியமா என்பதைவிட, இரண்டு தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியமிருக்கிறதா என்பதும் முக்கியமானது.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அதிக எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெறும் கட்சியிலிருந்து முதலமைச்சரும், அதிக எம்.பிக்கள் வெற்றி பெறும் கட்சியிலிருந்து பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகளை வாங்குகிறாரோ அவரே வெற்றி பெறுவார். அவர் 30% வாக்குகளைப் பெற்று, அவர் எதிர்த்த அத்தனை பேரும் மொத்தமாக 70% வாக்குகளைப் பெற்றிருந்தாலும், 30% வாக்குகள் பெற்றவர்தான் வெற்றியாளர். 70% வாக்குகள் வீண்தான்.
இதற்குப் பதிலாக ஒவ்வொரு கட்சியும் வாங்குகிற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் தேர்தலை நடத்தினால், மக்களின் வாக்குகளை நல்ல முறையில் பெறும் எல்லா கட்சிகளும் பிரதிநிதித்துவத்தைப் பெறும். இதை முதன்முதலில் 1957 தேர்தலில் போட்டியிட்டது முதல் தி.முக. வலியுறுத்தி வருகிறது. த.வெ.க. பேச வேண்டியது இதைத்தான். அருண்ராஜ் போன்ற அதிகாரிகளுக்கு அரசியலும் தெரியாது. மக்களின் மனநிலையும் புரியாது. அந்தோ பாவம்.