
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலாப்பயணிகளை அந்நாட்டு வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
இத்தோடு நிற்கவில்லை. இந்தியாவிற்கு தனியாக போக வேண்டாம் என்று அமெரிக்கப் பெண்களுக்கு அந்நாடு எச்சரிக்கை செய்திருக்கிறது. இது உலகரங்கில் இந்தியாவிற்கு ஏற்பட்ட அவமானம் என்று, இதற்கு காரணமான பாஜக அரசுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த 16.6.2025இல் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுலா வரும் அமெரிக்கப் பயணிகளுக்கு அந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ளது. அதில், இந்தியாவை தரவரிசை Level 2 என்று பதிவிட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. சுற்றுலாத்தலங்கள் மற்றும் பிற இடங்களில் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. ஆகவே பெண்கள் தனியாக செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
சுற்றுலாத்தலங்கள், அரசு முக்கிய அலுவலகங்கள், ஷாப்பி மால்கள், சந்தைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை பயங்கரவாதிகள் குறி வைக்கின்றனர். அவ்விடங்களில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தக்கூடும்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு ஆபத்து நேரும் போது அவர்களுக்கு உதவிடும் அளவிற்கு அரசிடம் போதிய திறன் இல்லை. கிழக்கு மகாராஷ்டிரா, வடக்கு தெலுங்கானா, மேற்கு வங்காளம் மேற்கு பகுதிகளில் ஆபத்து அதிகம் உள்ளது. அதனால் அமெரிக்க குடிமக்கள் இந்தப் பகுதிகளுக்கு பயணிப்பதாக இருந்தால் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது அமெரிக்க வெளியுறவுத்துறை.

ஜம்மு காஷ்மீர், இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது அந்நாட்டு வெளியுறவுத்துறை. அதே நேரம் ஆபத்தான பகுதிகள் என்று மணிப்பூ, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், மேகாலயா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு அமெரிக்க குடிமக்கள் பயணிப்பதாக இருந்தால் கண்டிப்பாக சிறப்பு அனுமதி பெற்றே ஆக வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் இந்த எச்சரிக்கை, ’’உலக அளவில் இந்தியாவுக்கு அவமானம்’’என்றும், ’’பாஜக ஆட்சியின் பரிணாமம்’’ என்றும் சொல்கிறார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
அவர் மேலும், ’’இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று பாலியல் வன்கொடுமை; பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் சுற்றுலா தலங்கள் மற்றும் பிற இடங்களில் நடக்கின்றன என அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, “பயணிப்பவர் பெண் பாலினத்தவராக இருந்தால், தனியாகப் பயணம் செய்ய வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் வெட்கக்கேடு. இது உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் அவமானம், தலைகுனிவு’’ என்று வருத்தத்தை பதிவு செய்கிறார் அமைச்சர்.
’’பிரதமர் மோடி தன்னால் இயன்றவரை இந்தியாவை அனைத்து தளங்களிலும் பின்னோக்கி இழுத்துக் கொண்டு செல்கிறார். 15 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி நகரும்’’ என்று எச்சரிக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ், ’’மதக்கலவரம், கலாச்சார செருக்கு, வெறுப்பு பேச்சு, வீண் விளம்பரங்கள் போன்ற முட்டாள் தனங்களுக்கு பாஜக அரசு செலுத்தும் அக்கறையை நாட்டின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் காண்பிக்க வேண்டும்’’ என்று ஆத்திரத்தை கொட்டி இருக்கிறார்.