
Representative Image
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 5) நடைபெறவுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்தியாவை பொறுத்தவரையில், தகவல் தொழில்நுட்பம், மருந்து மற்றும் ஜவுளி போன்ற பல ஏற்றுமதி சார்ந்த உள்நாட்டு துறைகளின் தலைவிதியை தீர்மானிக்கும் விதமாக அமெரிக்க தேர்தல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உலோகங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள், தொழில்துறைகள், பாதுகாப்புத் துறையிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஜோ பைடனின் ஆட்சிக்கு எதிரான மனநிலை அமெரிக்க மக்களிடையே அதிகமாக உள்ளதால், தற்போதைய அதிபர் தேர்தல் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு சாதகமாக அமையலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Also Read: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவது யார்? ‘Electoral College’ தேர்தல் முறை என்றால் என்ன?
Trump vs Harris
டிரம்ப்பின் வெற்றியானது உலக சந்தையில் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பாக அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீதான சுங்க வரியை அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால் அமெரிக்காவின் உள்நாட்டுப் பங்குச் சந்தையில் 5% திருத்தத்தை ஏற்படுத்த வழிவகுக்கலாம் என்றும் இருப்பினும் உலக சந்தையில் நடுநிலையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சில ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கமலா ஹாரிஸ் ஒரு மென்மையான பொருளாதார அணுகுமுறையை கொண்டு வரலாம், மேலும் நிலையான உலகளாவிய பங்கு மற்றும் நாணய சந்தைகளுக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது
டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி சீனாவை எதிர்மறையாக பாதிக்கும் என்றாலும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டின் மூலம் இந்திய சந்தைகளுக்கு பலனளிக்கும் விதமாக அமையலாம் என கணிக்கப்படுகிறது.
கவனிக்க வேண்டிய முக்கிய துறைகள்

தகவல் தொழில்நுட்ப சேவைகள்:
கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால், அதிக கார்ப்பரேட் வரிகளால் அமெரிக்காவின் தொழில்நுட்ப செலவினங்களைக் குறைக்கும், இந்திய ஐடி ஏற்றுமதி நிறுவனங்களிடையே எதிர்மறையாக பாதிக்கலாம்.
அதே சமயம் டிரம்ப்பின் வெற்றி, சீனாவின் MFN வரி அந்தஸ்தைத் திரும்பப் பெறுவது போன்ற கொள்கைகளால், இந்தியாவின் உலகளாவிய திறன் மையங்களில் (GCC) வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம். இது மிட்-கேப் IT நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என Antique Stock Broking தெரிவித்துள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு:
டிரம்ப் நிர்வாகம், பாரம்பரிய எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்படுத்துவதற்கு ஆதரவாகவும், கமலா ஹாரிஸ் காலநிலை மாற்றம் மற்றும் மாசு உமிழ்வுகளை குறைப்பதில் கவனம் செலுத்துவதற்கு ஆதரவாகவும் செயல்படலாம் என கூறப்படுகிறது.
பாரம்பரிய எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவு அதன் விலைகளை குறைக்க வழிவகுக்கும், இது HPCL, BPCL மற்றும் IOC போன்ற இந்திய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு (OMCs) பயனளிக்கும், அதே போல் IGL, MGL மற்றும் குஜராத் கேஸ் போன்ற எரிவாயு விநியோகஸ்தர்களுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமலா ஹாரிஸ் நிர்வாகம், கார்பன் கிரெடிட் செலவுகள் (carbon credit costs) வடிவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்கள் மீது அதிக அபராதம்/செலவுகளுக்கு உட்படுத்தலாம் என கணிக்கப்படுகிறது.
பாதுகாப்புத் துறை:
டிரம்ப் நிர்வாகம், உலகளாவிய மோதல்களைத் தீர்க்கும் நோக்கங்கள் மூலம் இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் மற்றும் HAL போன்ற பாதுகாப்பு நிறுவனங்களுக்கான விநியோகச் சங்கிலியை எளிதாக்க வழிவகுக்கும்.
மேலும், அமெரிக்க இராணுவத்தின் வலிமையை உறுதி செய்வதில் டிரம்ப் நிர்வாகத்தின் கவனம், இந்தியாவின் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பிற்கு சாதகமாக இருக்கும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உலோகங்கள்:
சீன எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிகள் மீது ஏற்கனவே வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்க தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் நடுநிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு கட்சிகளும் புதிய கொள்கைகள் எதுவும் அறிவிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
ஜவுளி துறை:
அமெரிக்காவிற்கு ஜவுளிப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா தொடர்ந்து இருப்பதால், சீனா மீது டிரம்ப் நிர்வாகம் வர்த்தகத் தடைகளை விதித்தால் இந்திய ஜவுளித் தொழிலாளிகளுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவுகள் நாளை(நவம்பர் 5) நடைபெற்று அன்றிரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவது யார்? ‘Electoral College’ தேர்தல் முறை என்றால் என்ன?