
தவெகவை குழிதோண்டி புதைக்காமல் விடமாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறார் போலிருக்கிறது அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அவரின் ஒவ்வொரு பேச்சும் செயலும் அதைத்தான் உணர்த்துகிறது.
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில்தான் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் காட்டி வந்தார் விஜய். கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. 57 சீட் முதல் 65 சீட் வரையிலும் தருவதாக அதிமுக தரப்பில் இருந்து உறுதி அளித்தும் கூட 80 சீட்டுக்கு மேல் வேண்டும் என்று கேட்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சமயத்தில், தனது குருவான பிரசாந்த் கிஷோரை அழைத்துச்சென்று விஜய்க்கு ஆலோசனை சொல்லச் சொன்னார் ஆதவ் அர்ஜூனா.

தனித்து நின்றாலே தவெகதான் ஆட்சியை பிடிக்கும். நீங்கள்தான் அடுத்த முதல்வர் என்று பி.கே. சொன்னதால், விஜய்க்கும் அதில் கொஞ்சம் தெம்பு வந்து, அதிமுகவின் பேச்சுவார்த்தையில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்றும், 5 வருடத்தில் இரண்டறை வருடங்கள் விஜய் முதல்வராக இருக்க வேண்டும் என்றும் ஏகப்பட்ட நிபந்தனைகள் வைத்ததால் எடப்பாடி பழனிசாமி கடுப்பாகிப் போய் பாஜகவுடன் கூட்டணி வைத்து விஜய்க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார்.
அப்படி இருந்தும் கூட அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று இப்போதும் விஜய் விரும்புவதாகவும், எடப்பாடி பழனிசாமியும் அதற்காகத்தான் விஜய்யை யாரும் விமர்சிக்க கூடாது என்று அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் பரவுகிறது.

இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் சிரித்தபடியே பேசிக்கொண்டு நடக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் ஆதவ் அர்ஜூனா, ’’பிஜேபி, அதிமுகதான் நிப்பாங்கன்னு நெனக்கிறேன்..இவன் கூட கூட்டணிக்கு வருவாங்களா.. அண்ணாமலையாச்சும் 10 பேர வச்சிக்கிட்டு எலெக்சன்ல நின்னு 18 பர்சண்ட் ஓட்டு வாங்குனாரு..எடப்பாடிய நம்பி எவனும் கூட்டணிக்கு வர்ற மாதிரி தெரியல…’’என்று சொல்லி விட்டு சிரிக்கிறார்.
இதைக்கேட்டு அரசியல் விமர்சகர்கள் பலரும், தவெகவை குழிதோண்டு புதைக்காமல் விடமாட்டேன் என்று சபதம் போட்டிருக்கிறார் போலிருக்கிறது என்று ஆதவ்வின் பேச்சை விமர்சிக்கின்றனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, அமமுக, புரட்சி பாரதம், தமமுக, ஐஜேகே என்று பல கட்சிகள் இருக்கிறது. ஓபிஎஸ் அணியிம் கூட உள்ளது. அப்படி இருக்கும்போது எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு போகவில்லை என்று சொல்வது அபத்தம் என்கின்றனர் அதிமுகவினர். அதே நேரம், தவெகதான் கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் தள்ளாடுகிறது என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சு குறித்து, ‘’புரணி பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’’ என்று மறுத்த சீமான், ’’ஆதவ் அர்ஜூனாதான் என்னை அதிமுக கூட்டணிக்கு வரச்சொல்லி அழைத்தார். அதிமுக கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் பதவி வாங்கித் தருவதாக என்னிடம் பேசினார்’’ என்று பதிலளித்திருக்கிறார்.

நிலைமை இப்படி இருக்கும் போது இப்போது ஏன் அதிமுகவை தாழ்த்தி விமர்சிக்க வேண்டும்? பிரசாந்தி கிஷோரின் ஆலோசனையை ஏற்று தவெக கூட்டணியில் அதிமுக இணைவதை தடுக்க இந்த வேலையைச் செய்கிறாரா? என்று வலைத் தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2m0keh