
நடிகர் விஜய் தவெகவின் தலைவர் ஆகிவிட்டதால் அவர் நடத்தி வரும் கல்வித்திருவிழாவில் மாணவிகள் அவரை சந்தோசத்தில் கட்டிப்பிடிப்பதை கடுமையாக விமர்சித்திருந்தார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.
இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே, நாளைக்கு மாற்றான் மனைவியாக வாழப்போற பொண்ணை அப்பன், ஆத்தா, ஆயிரக்கணக்கான ஊடகங்கள் முன்னால.. ஒரு சினிமா கூத்தாடிப்பயல கட்டிப்பிடிக்க அனுமதிக்கிறான். இது என்ன ஈனப்பிறவி. தமிழனோட பிறவியா இது?’’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார் வேல்முருகன்.
தவெக தரப்பில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த பின்னர், அதற்கு விளக்கம் கொடுத்திருந்தார் வேல்முருகன். ‘’பொதுவெளியில் கதாநாயகனையோ, கதாநாயகியையோ கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் அநாகரிகமான செயல் என்று கருதுகிறது நிலம் தமிழர் நிலம். ஆனால் இந்த நிலத்தில் சில பெண்கள், சில ரசிகைகள் உணர்ச்சிவயப்பட்டவர்களாக திரைசார்ந்த கதாநாயகர்கள் வருகின்ற போது அவர்களை கட்டிப்பிடிப்பது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இளம்பெண்கள் சினிமாக்காரர்களை பார்த்த உடன் உணர்சி வயப்படக்கூடாது. நீங்கள் பிற்காலத்தில் மாற்றானோடு வாழும்போது அந்த ஆண்மகனுக்கு இது நெருடலை ஏற்படுத்தும் . இந்த தவருகளை என் தமிழ்ப்பிள்ளைகள் செய்யக்கூடாது’’ என்று விளக்கமளித்திருந்தார் வேல்முருகன்.
அவரது விளக்கம் முன்பை விடவும் எதிர்வினைகளைத் தந்தது. வேல்முருகனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விஜய்யின் கல்வி திருவிழாவுக்கு வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், விஜய்யை நாங்கள் அப்பாவா, அண்ணனா, உயிரா நினைக்கிறோம். இதே அவுங்க குடும்பத்துல நடந்த இப்படிச் சொல்லுவாங்களா? அப்படி சொல்லக்கூடாது.”என்றார்.

தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமாரோ, ‘’குழந்தைகளை, மாணவிகளை பேசுவது வக்கிரமானது. இதை மனிக்க முடியாது. பொதுமக்கள் நிறைய பேர் புகார் கொடுத்திருக்கிறார்கள். வழக்கறிஞர்கள் நிறைய பேர் புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தனது பேச்சால் நெகட்டிவ் விமர்சனங்களால் அவர் பெருமைப்படுவதாக சொல்லி இருக்கிறார். உண்மையில் இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும். இன்னமும் அவர் டோல்கேட் வேல்முருகனாக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறார். அவரை எந்த ஸ்தானத்தில் வைத்தாலும் சட்டமன்ற உறுப்பினராக்கி மக்கள் அழகு பார்த்தாலும் அவர் ஒரு டோல்கேட் வேல்முருகனாகவே ஆசைப்படுகிறார்.

இதுமாதிரியான ஒரு பேச்சை வேல்முருகன் இத்தோடு நிறுத்துக்கொள்ள வேண்டும். இதை நாங்க சும்மா விடப்போவதில்லை’’ என்று வெடித்திருக்கிறார்.
மாணவ, மாணவிகளுக்கு விஜய் பரிசளிக்கும்போது, அவர்கள் விஜய்யை காமராஜர் என்றும், இளைய காமராஜர் என்று புகழ்ந்து வருவதால், விஜய் எல்லாம் காமராஜர் ஆகிவிடுவரா? இதெல்லாம் நியாயமா? என்றும் கடுமையாக வேல்முருகன் விமர்சித்திருந்த நிலையில், தன்னை காமராஜர் என்றும், இளைய காமராஜர் என்றும் அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டிருக்கிறார் விஜய்.

வலுக்கும் இந்த தவெக – தவாக மோதலால், இத்தோடு வேல்முருகன் இந்த விவகாரத்தை விடப்போகிறாரா? இல்லை இதற்கும் விளக்கம் கொடுத்து விவகாரத்தை பெரிதாக்க நினைக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.