
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய அடாவடி தாக்குதலும், அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மீது ஈரான் நடத்திய தாக்குதலும் இரு நாடுகளையும் பற்றி எரிய வைத்திருக்கிறது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தலைமை அலுவலகம் மீதான ஈரானின் தாக்குதல் பலத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள பாலஸ்தீனப் பகுதிகள் தற்போது இரட்டைத் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. உணவும் மருந்தும் இல்லாமல் காயம்பட்டவர்கள் தவிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை முழுமையாக வெளியில் தெரிவதில்லை.
இஸ்ரேல் என்பது பிற நாடுகளால் உருவாக்கப்பட்ட நாடு. குறிப்பாக, அமெரிக்காவின் தயவில் உருவான நாடு. யூத இனத்தவர்களைக் கொண்ட அந்த நாடு, பாலஸ்தீனத்தை தன் ஆக்கிரமிப்பில் வைத்துள்ளது. பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிய விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் உலக நாடுகளின் தலைவர்கள் பலரின் ஆதரவைப் பெற்றிருந்தார். இந்தியாவும் அவர் பக்கம் இருந்தது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவளித்தவர். ஐ.நா.அவையில் பாலஸ்தீனத்திற்காக இந்தியாவும் இன்னபிற நாடுகளும் குரல் கொடுத்தன.
ஐ.நா.சபையாக இருந்தாலும் அமெரிக்கா நினைப்பதுதான் உலகின் போக்காக மாறி 35 ஆண்டுகளாகிறது. இரண்டாம் உலகப் போருக்குப்பின், உலகின் பழைய வல்லரசுகள் வலிமையிழந்து அமெரிக்காவும், சோவியத் யூனியன் என்றழைக்கப்பட்ட ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும்தான் வல்லரசுகளாகின. உலக நாடுகள் அமெரிக்கா பக்கமா, சோவியத் யூனியன் பக்கமா என்று முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அமெரிக்கா தன் அருகில் உள்ள கியூபா முதல், நம் நாட்டுக்கு அருகேயுள்ள இலங்கை வரை கடல்பரப்பிலும் நிலப்பரப்பிலும் ஆதிக்கம் செலுத்த முயன்றது. சோவியத் யூனியன் அதற்கு கடிவாளம் போட்டதுடன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.
அமெரிக்காவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்தால் சோவியத் யூனியனும் அதன் ஆதரவு நாடுகளும் அதில் பங்கேற்காது. சோவியத் யூனியனில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் பங்கேற்காது. இதில் இந்தியா போன்ற நாடுகள் இரண்டில் எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலை என்ற முடிவை எடுத்தன. அவற்றிற்கு அணிசேரா நாடுகள் என்று பெயர். அமெரிக்கா, சோவியத் யூனியன், அணி சேரா நாடுகள் என்ற முக்கோண வியூகம் இருந்ததால் அமெரிக்காவின் ஆதிக்க விருப்பங்கள் அத்தனை எளிதாக நிறைவேறவில்லை. 1990ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் 15 நாடுகளாகப் பிரிந்த பிறகு, அணி சேரா நாடுகளுக்கும் வேலையின்றிப் போனது. உலகின் ஒரே வல்லரசு என்ற நிலைக்கு அமெரிக்கா வந்தது. அங்கிள் டாம் என்றழைக்கப்படும் அமெரிக்காதான் உலக நாட்டாண்மை. அந்த நாட்டாண்மையின் ஆதரவில்தான் இஸ்ரேல் ஆட்டம் காட்டுகிறது.
பாலஸ்தீனிய மக்கள் முஸ்லிம்கள் என்பதால் அவர்களை இஸ்ரேல் திட்டமிட்டு அழிக்கும் வேலையை காசா மற்றும் மேற்கு கரைப் பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது. முஸ்லிம் எதிர்ப்பையே கட்சிக் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க.வின் கையில் இந்தியா இருப்பதால், இன்றைய இந்திய அரசின் முழு ஆதரவும் இஸ்ரேல் பக்கம்தான். பா.ஜ.க.வின் ஊதுகுழல்களாக உள்ள இந்திய ஊடகங்கள் இஸ்ரேலில் போர்வெறியை ஆதரிப்பதும், ஈரான் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் அதனை மதரீதியாக குற்றம்சாட்டுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஈரான் தீவிரமான முஸ்லிம் நாடு. அயதுல்லா கோமெனி காலம் முதல் இன்றைய காலம் வரை ஈரானின் மதச்சார்பு அரசாங்கம் பற்றி உலகம் அறியும். ஈராக்குடன் ஈரான் தொடர்ச்சியாக நடத்திய போர், பிற நாடுகளுடனான அதனுடைய சச்சரவுகள், அணு ஆயுதத் தயாரிப்பு, அமெரிக்க எதிர்ப்பு என ஈரானின் நிலைப்பாடுகள் பலவித சிக்கலான முடிச்சுகளைக் கொண்டவை. அதன் எண்ணெய் வளம் மீது அமெரிக்காவுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு.
உலகில் எங்கு எந்த வளம் இருந்தாலும் அதனை அபகரிக்க அமெரிக்கா வகுக்கும் வியூகங்கள் பல நாடுகளையும் பாதிக்கக்கூடியவை. குவைத், ஈராக் போன்ற நாடுகள் மீது அமெரிக்கா செலுத்திய ஆதிக்கமும் எண்ணெய் வளத்திற்காகத்தான். ஈராக்கில் பேரழிவு ஆயுதம் இருப்பதாகக் குற்றம் சாட்டி தாக்குதல் நடத்தி, அதன் அதிபர் சதாம் உசேனையும் தூக்கில் போட்டது அமெரிக்கா. ஆனால், கடைசிவரை ஈராக்கில் இருந்த பேரழிவு ஆயுதங்கள் என்ன என்று தெரியவில்லை. இருந்தால்தானே?
ஈராக்கைத் தொடர்ந்து ஈரான் மீது குறி வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவு என்ற பெயரில் ஈரானை எதிர்க்கிறது அமெரிக்கா. மோடி என் நண்பர் என்று சொல்லிக்கொண்டே அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் நாட்டின் விருந்தினராக பாகிஸ்தான் ராணுவ அதிகாரியை அழைத்திருக்கிறார். நாட்டாண்மைகள் நியாயமும் தீர்ப்பும் உள்ளூர் ஆலமரத்தடி முதல் உலக அரங்கம் வரை இப்படித்தான்.