
தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமை அ.தி.மு.க.வுக்கே உரியது. 1972ல் கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து 11 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் தலைமையில் ஆட்சியில் இருந்தது. பின்னர் 1991, 2001, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்காண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். அ.தி.மு.க.வின் 52 ஆண்டுகால வரலாற்றில் அது ஏறத்தாழ 31 ஆண்டுகாலம் ஆளுங்கட்சியாக இருந்துள்ளது. மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்ததுடன், ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட மாநிலக் கட்சி என்று அக்கட்கியின் தலைவர்கள் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதன் தற்போதைய நிலவரம் கண்டு அதன் தொண்டர்களே பரிதாபப்படுகிறார்கள்.
31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு, கூட்டணி பற்றிய விவரங்களை பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்கிறார். அது பற்றி கூட்டணிக்குத் தலைமை தாங்கக்கூடிய மாநிலத் தலைமையான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏதோ யோகத்திலும் தியானத்திலும் உட்கார்ந்திருப்பது போல தலையை சாய்த்து கண்களை மூடி, வாயைத் திறக்காமல் உட்கார்ந்திருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா சொன்னபோதுகூட எடப்பாடி பழனிசாமியிடமிருந்து ஒரு வார்த்தைகூட வெளிப்படவில்லை.
கூட்டணி ஆட்சியை அமைப்பது என்பது ஜனநாயகத்தில் உள்ள நடைமுறைதான். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை என்றாலும், அருகில் உள்ள கேரளாவில் இடது முன்னணியின் கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. அங்கே கூட்டணிக்குத் தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை இருந்தாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற தோழமைக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் தருவது வழக்கம். மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இடதுசாரிகளின் ஆட்சி நடைபெற்ற போதும் தோழமைக் கட்சிகள் பங்கேற்ற கூட்டணி ஆட்சிதான் நடைபெற்றது.
வலதுசாரி இயக்கமான பா.ஜ.க தனக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் கூட, மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, கூட்டணி ஆட்சியை அமைப்பது வழக்கமாக உள்ளது. பீகாரின் ஐக்கிய ஜனதாதளம், மராட்டியத்தின் சிவசேனா உள்பட பல கட்சிகளை உடைத்து, ஆட்சியைத் தன் கன்ட்ரோலில் வைத்துக் கொள்ளக்கூடிய வேலையை பா.ஜ.க தொடர்ந்து செய்து வருகிறது. அ.தி.மு.க.விலிருந்து தனித்து செயல்படும் டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இப்போது பா.ஜ.க.வின் முழு கண்ட்ரோலில் உள்ள நிலையில், அவர்களைத் தன் பக்கம் சேர்க்கவே மாட்டேன் என்று பிடிவாதம் காட்டிய எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் கூட்டணியை அறிவித்து, கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க. அறிவித்துள்ள நிலையில், எதுவுமே பேசமுடியாமல் தவிக்கிறார் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. தனக்குத் தேவையான கட்சிகளை மட்டும் சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்தது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை என்றதுடன், பல தொகுதிகளில் பா.ஜ.க.வைவிட குறைந்த வாக்குகளை வாங்கியது. அந்த இடங்களில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வை தன் கட்டுப்பாட்டில் எளிதாகக் கொண்டு வந்து விட்டது பா.ஜ.க.
எடப்பாடி பழனிசாமி குடும்பத்தார் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அவ்வப்போது ரெய்டுகள் நடத்தப்படுவதும், கூட்டணி ஆட்சிக்கு கட்டுப்பட வைக்கும் முயற்சியாகும். கூட்டணிக்குத் தலைமை அ.தி.மு.க. என்று பெயரளவுக்கு இருந்தாலும், பா.ஜ.க. தலைமை சொல்கின்ற கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்தாக வேண்டும். அவர்களுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதையும், பா.ஜ.க. எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதையும் டெல்லிதான் முடிவு செய்யும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டன.
தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என கூட்டணிக்கான காரணமாக எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், நயினார் நாகேந்திரன் என எல்லாருமே சொல்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் நினைத்தால் சட்டமன்றத் தேர்தலில் ஒரு ஆட்சியை மாற்றி விட்டு, இன்னொரு ஆட்சியைக் கொண்டு வரமுடியும். ஆனால், முந்தைய ஆட்சியை மாற்றுவதற்குத் தேவையான வலுவான காரணத்துடனும், அடுத்த ஆட்சியமைக்கக்கூடியவர்களின் யோக்கியதையையும் பொறுத்தே அமையும். இந்த இரண்டிலும் அ.தி.மு.க. பரிதாபமாக இருப்பதால், தமிழ்நாட்டில் கால் பதிக்கும் நோக்கத்துடன் அ.தி.மு.க.வை வச்சி செய்கிறது பா.ஜ.க.