கோவை வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வரவேற்றபோது அவருக்கு அருகிலேயே நின்று வரவேற்றார் ஜி.கே.வாசன்.
தற்போது பாஜக சார்பில் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நபரும் இவர்தான்.
பீகார் தேர்தல் வெற்றிக்கு பின்னர் தமிழகத்தில் கூட்டணியை வலுப்படுத்த நினைக்கிறது பாஜக. இதற்காக கூட்டணிக்கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் பாஜக டெல்லி தலைமை, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் அவர்களை கூட்டணிக்குள்ளாவது கொண்டு வந்துவிட வேண்டும் நினைத்து, அது தொடர்பாக பழனிசாமியுடன் பேசி முடிவெடுக்க ஜி.கே.வாசனை அனுப்பி வைத்தது.

2026ல் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி. விஜய்தான் முதலமைச்சர் என்று கரூர் சம்பவத்திற்கு பின்னரும் தவெக உறுதியாக நின்றதால், அதிமுக கூட்டணியில் விஜய் இணைவார் என்ற கனவு காற்றோடு போனதால், போட்ட பிள்ளையார் சுழி எல்லாம் வீணாய்ப் போனதால், பழனிசாமி படு அப்செட்டில் இருந்த நேரத்தில் சேலத்தில் அவரை சந்தித்தார் வாசன்.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் விவகாரம் குறித்து வாசன் சொன்னதும், டிடிவி தினகரனை கட்சியில் இணைப்பது என்பதும் அவருடன் இணைந்து பயணிப்பது என்பதும் நடக்காத காரியம். அதே நேரம் தினகரன், பன்னீர்செல்வம் இருவரையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர எந்தவித ஆட்சேபனையும் இல்லை’’ என்று கூறிவிட்டார்.

கேட்ட உடனேயே பழனிசாமி பச்சைக்கொடியை பறக்க விட்டதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத வாசன், அவர் வீட்டு வாசலில் நின்றே டெல்லிக்கு போன் போட்டு சொல்லி விபரத்தை சொல்லி இருக்கிறார்.
விஜய் வருவார் என்கிற தெம்பில் எகத்தாளமாக திரிந்த பழைய பழனிசாமி இப்போது இல்லை. அதனால்தான் கேட்ட உடனேயே தலையாட்டி இருக்கிறார் என்று சொல்லிவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்திருக்கிறது டெல்லி.
