கல்லீரல் பாதிப்பால் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நடிகர் அபிநய்(44) சிகிச்சை பலனின்றி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 4 மணியளவில் காலமானார்.
எலும்பும் தோலுமாக இருக்கும் ஒருவருக்கு கேபிஒய் பாலா ஒரு பணக்கட்டு கொடுத்து ஆறுதல் சொல்லும் வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் வைரலாகி வந்தது. அந்த வீடியோவைப் பார்த்ததும் யார் அந்த நபர்? என்று உள்ளே சென்று பார்த்தால் ஒரே அதிர்ச்சி. அவர் நடிகர் அபிநய்.

கடந்த 2002ம் ஆண்டில் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் நடித்தவர் அபிநய். தொடர்ந்து ஜங்ஷன், சிங்கார சென்னை, பொன்மேகலை படங்களில் ஹீரோவாக நடித்தார். தமிழ், மலையாளத்தில் 15 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
நடிக்க வாய்ப்பில்லாமல் போனதும் டப்பிங் பேசி வந்தார். துப்பாக்கி படத்தில் வில்லனுக்கு டப்பிங் கொடுத்தார். அஞ்சான், பையா, காக்கா முட்டை படங்களில் முக்கிய கேரக்டர்களுக்கு டப்பிங் பேசி இருந்தார் அபிநய்.
டப்பிங்குடன் விளம்பரப் படங்களிலும் நடித்து வந்தார் அபிநய். அந்த வாய்ப்புகளும் இல்லாமல் போனதால், ஒரு கட்டத்தில் அம்மா உணவகத்தில் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதில் லிவர் சிரோசிஸ் நோய் பாதித்து, ஆளே மாறி உருக்குலைந்து போய்விட்டார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய திருக்கிறது. இதற்கு போதிய பணம் இல்லாமல் அல்லாடி வருவதை அறிந்து, நடிகர் கேபிஒய் பாலா அவரை சந்தித்து ஆறுதல் சொல்லி ஒரு லட்சம் ரூபாய் நிதியளித்தார்.
பாலாவிடம் மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட்களை காட்டி, ‘’நான் போயிடுவேன்…ஒன்றரை வருடம்தான் டைம் கொடுத்தார் டாக்டர்’’ என்று கலங்கினார்.
அவர் அப்படிச் சொன்னதும், ‘’அண்ணே..அண்ணே.. நீங்க நல்லா வருவீங்க. எதையும் நினைச்சு கவலைப்படாதீங்க. உங்களோட நடிக்க வாய்ப்பு தருவீங்களா?’’ என்று பாலா கேட்க, சிரித்தார் அபிநய்.

அவருக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக, பாலா தனது பட விழாவிலும் அவரை பங்கேற்று மேடையேற்றினார்.
தொடர்ந்து தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களும் அபிநய்க்கு உதவிகள் செய்து வந்தனர். பலரும் நம்பிக்கை கொடுத்து வந்த போதிலும் மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வந்த அபிநய் இன்று மறைந்தார்.
