
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’தான் என்று பாஜக முகியத் தலைவர் அமித்ஷா சொல்கிறார். அவர் ஒருமுறை சொன்னால் ஏதோ பேச்சுவாக்கில் சொல்லிவிட்டார் என்று கடந்து போய்விடலாம். ஆனால் ‘கூட்டணி ஆட்சி’ என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்.
பாஜக இந்த நிலைப்பாட்டில் இவ்வளவு அழுத்தமாக, உறுதியாக உள்ளபோது அதிமுக என்ன நிலைப்பாட்டில் தெளிவில்லாமல் இருக்கிறது. இதில் கூட்டணி ஆட்சியா? என்று கேட்போரை தெளிவில்லாமல் இருக்கிறீர்கள் என்று சொல்லி சமாளிக்கப் போராடுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அதிமுக ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்பதைச் தெளிவாகச் சொல்லாமல் மழுப்பி வருகிறார். தலைமையே இப்படி இருந்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்?
அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா சொல்கிறாரே? என்று கேட்டால், ‘’புரட்சித்தமிழர் எடப்பாடி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி மாபெரும் வெற்றியை வழங்குவதற்கு தயாராகி விட்டது.

எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும், எத்தனை எத்தனை திசை திருப்பினாலும் அதிலே மக்களும் தெளிவாக இருக்கிறார்கள். எங்கள் பொதுச்செயலாளரும் தெளிவாக இருக்கிறார். நாங்களும் தெளிவாக இருக்கிறோம். யாருடைய அழுத்தத்தாலோ நாங்கள் தெளிவில்லாததைப் போல நீங்கள் கேள்வி கேட்பதும், அந்த கேள்வியை கேட்கச் சொல்லுபவர்களும் , அழுத்தம் கொடுப்பவர்களும் வேண்டுமானால் தெளிவில்லாமல் இருக்கலாம். முதலமைச்சராக புரட்சித்தமிழர் வரவேண்டும்’’ என்கிறார்.
கூட்டணி ஆட்சிதான் என்று பாஜக அடித்துச் சொல்லும்போது, கூட்டணி ஆட்சியா? அதிமுக ஆட்சியா? என்பதைச் சொல்ல அதிமுக அஞ்சுவது ஏன்?