
ஆயிரக்கணக்கில் விவசாயக்கடன், தனிநபர் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடியாத எளிய மக்களை வங்கிகள் வதைக்கும் போதெல்லாம் பல ஆயிரம் கோடிகள் கடன் வைத்துவிட்டு தப்பியோடிய விஜய் மல்லையா கதைதான் பேசுபொருளாக இருக்கும்.
அந்த விஜய் மல்லையா 9 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்திருக்கிறார். தான் தப்பி ஓடியவன் தான்; ஆனால் திருடன் இல்லை என்கிறார்.
மல்லையாவால் வங்கிகள் பாதிக்கப்பட்டு, வங்கிகளால் தேடப்படும் நபர் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தான் பாதிக்கப்பட்டவன் என்று சொல்லும் மல்லையா, வங்கிகள் மீது புகார் கூறி இருக்கிறார்.
கிங்ஃ பிஷர் என்றாலே விஜய் மல்லையா பெயரும் உச்சரிக்கப்படும். ஆடம்பரமான தொழிலதிபராக வலம் வந்தார் விஜய் மல்லையா. மதுபானம், ஏர்லைன்ஸ், ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆர்சிபி அணியின் (முன்னாள் )உரிமையாளர் என்று பிஸியாக இருந்த மனிதர் வங்கிகளில் வாங்கிய கடனை 9 ஆயிரம் கோடி ரூபாய் கட்ட முடியாமல் தப்பி ஓடினார் என்று செய்திகள் பரவின.

இவர் வெளிநாட்டிற்கு தப்பிய பிறகு இவர் வீட்டில் இருந்து பல நிறங்களில் ஒரே நிறுவனத்தின் பல ஆடம்பர கார்களை வரிசையாக இவர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் மல்லையா அண்மையில் இவர் யூடியூபர் ராஜ் ஷமானியுடன் பாட்காஸ்ட் ஒன்றில் பேசியது வைரலாகி வருகிறது.
‘’உண்மையை வெளிப்படுத்தும் நேரம்’’ என்று இந்த வீடியோ வெளியான பிறகு தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் மல்லையா. 9 ஆண்டுகளுக்கு பிறகு பேசுகிறேன் என்றும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களின் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த 2008இல் ஐபிஎல் கிரிக்கெட்டின் மும்பை அணியை வாங்க முயற்சித்தார். கடைசி நேரத்தில் அது முடியாமல் போகவே பெங்களூரு அணியை வாங்கினார். தனது ராயல் சேலஞ்ச் எனும் மதுபானத்தின் பெயரினையே பெங்களூரு அணியின் பெயராக வைத்தார். 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆர்சிபி அணி வெற்றிக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்த அணியின் முன்னாள் உரிமையாளர் என்கிற முறையில் இந்த அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் மல்லையா.

17 ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஆர்சிபி அணி இப்பொது வென்றிருக்கும் நிலையில் மனம் திறந்திருக்கிறார் மல்லையா.
அதில், தனது கடன் தொகை 11.5 % வட்டியுடன் சேர்த்து தான் கட்ட வேண்டிய மொத்த தொகையே 6,203 கோடி ரூபாய்தானாம். ஆனால் வங்கிகள் தன் சொத்துக்கள் மூலம் 14 ஆயிரம் கோடி ரூபாயை பறிமுதல் செய்துவிட்டன என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.
கடந்த 2024இல் டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உதவித்தொகைகளுக்கான கூடுதல் தொகை பற்றிய விவாதத்தின் போது, அமலாக்கத்துறை இதுவரை மோசடியாளர்களிடம் இருந்து 22,280 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளதாகவும், விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்று அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இவ்வாண்டின் பிப்ரவரி மாதத்தில் தான் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியது 6,200 கோடி ரூபாய்தான். ஆனால் வங்கிகள் 14ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக தனது வழக்கறிஞர் மூலம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப் பட்டு உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தான் இந்தியாவுக்கு திரும்பாததால் தன்னை தப்பியோடியவன் என்று சொல்வதாகவும், ஆனால் தான் தப்பி ஓடவில்லை . முன்கூட்டிய திட்டமிட்ட சுற்றுப்பயணத்தின் படிதான் இந்தியாவை விட்டு வெளியேறியதாகச் சொல்கிறார் மல்லையா. அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுத்தான் லண்டன் சென்றதாகவும் கூறுகிறார். கடந்த 2018இல், அருண் ஜெட்லி ஒரு குற்றவாளியுடன் சகவாசம் வைத்துள்ளார். விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறியதை தடுக்கத் தவறிவிட்டார். அதனால் அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தான் தற்போது வரையிலும் இந்தியாவுக்கு திரும்ப வராததால் வேண்டுமானால் தப்பியோடியவன் என்று கூட சொல்லிக்கொள்ளுங்கள், ஆனால் திருடன் என்று எப்படிச் சொல்லலாம்? என்று கேட்கிறார். அதாவது தான் திருடன் இல்லை என்று சொல்கிறார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் உலகளாவிய நிதி நெருக்கடிதான் தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சரிவுக்கு காரணம் என்கிறார்.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சரிவை சந்திக்கும் முன்னரே, பிரணாப் முகர்ஜியிடம் சென்று தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மந்தமான பொருளாதாரத்தினால் செயல்பட முடியாத நிலையில் உள்ளது. அதனால் செயல்பாடுகளை குறைக்க வேண்டும் என்றும், விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து, ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு அவசியம் இல்லை என்று சொல்லி வங்கிகள் ஆதரவளிக்கும். அதனால் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம், செயல்பாடுகளை குறைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறி இருக்கிறார்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிதிக் குற்றங்களுக்காக விஜய் மல்லையாவை விசாரணைக்கு உட்படுத்த இந்திய அதிகாரிகள் முயற்சித்து வரும் நிலையில் மல்லையா இந்த விளக்கத்தினை அளித்திருக்கிறார்.
விஜய் மல்லையா விவகாரத்தைப் பார்க்கும் போது, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்…’படத்தின்,
’’என்ன தேசமோ..? இது என்ன தேசமோ..?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு ஞாயம் பேசுமோ ?
தர்மம் தூங்கிப் போகுமோ ?
நீதி வெல்லுமோ? இங்கு நேரமாகுமோ ?’’ என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.