மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளால், EVM இயந்திரம் குறித்துப் பல சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் சீனியர் வழக்கறிஞர் நரேந்திர நாயக் மிஷ்ரா என்பவர் EVM இயந்திரம் குறித்து மத்தியப்பிரதேசத்தில் மட்டும் கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அந்த அனைத்துப் புகார்களையும் வைத்து இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார் நரேந்திர நாத் மிஸ்ரா.
கடந்த நவம்பர் 7ஆம் தேதி துவங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களின் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முடிவுகள் வெளியானப் பிறகு வேட்பாளர்கள் உட்பட பலருக்கு பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.
குறிப்பாக நவம்பர் 7ஆம் தேதி துவங்கி நவம்பர் 23 ஆம் தேதி வரை நடந்து முடிந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகிறது. இந்த மாநிலங்களில் பாஜகவை சேர்ந்த பல வேட்பாளர்கள் வெறும் 500-1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
சத்தீஸ்கரில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவருக்கு வெறும் ஒரேயொரு வாக்கு கிடைத்தது என்பது ஆச்சரியமடைய செய்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் கூறுகையில், அவரது குடும்பத்திலேயே 15 வாக்குகள் கிடைக்கப் பெற்றிருக்கும் என்றும், அதெப்படி தனக்கு ஒரே ஒரு வாக்கு பதிவாகி இருக்கும் என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதேபோல், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் தொகுதியில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்ட பல வேட்பாளர்களுக்கு, சொல்லி வைத்தார் போல் ஒவ்வொரு EVM இயந்திரத்திலும் வெறும் 5 வாக்குகள் மட்டும் பதிவாகி இருக்கிறது. பாஜக வேட்பாளருக்கு, அந்த அனைத்து இயந்திரங்களிலும் 270 வாக்குகள் பதிவானது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் சுட்டிக் காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நரேந்திர மிஷ்ராவின் வழக்கு, இரு முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இவ்விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாத தேர்தல் ஆணையம், விசாரணையை இதுவரை துவங்கவில்லை.
தேர்தல் ஆணையம் இவ்விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தவில்லை என்றால், எலக்ட்ரானிக் ஆதாரங்கள் அழிக்கப்படலாம் என கூறப்படுகிறது. EVM VV-PAT இயந்திரங்களில் 45 நாட்களுக்கு மட்டுமே தரவுகளை சேமித்து வைக்கமுடியும் என்பது கவனத்திற்குரியது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் படி EVM VV-PAT இயந்திரங்களில், கிட்டத்தட்ட 6.5 லட்சம் இயந்திரங்கள் இதுவரை பழுதாகி இருக்கிறது. அந்த இயந்திரங்கள் அனைத்தும் உற்பத்தி செய்த நிறுவனத்திற்கே திரும்ப அனுப்பப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் 2018-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட M3 எனப்படும் புதிய ரக இயந்திரங்களாகும்.
2019 இந்தியப் பொதுத் தேர்தலின் போது கிட்டத்தட்ட 17.4 லட்சம் EVM இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. அதில் சுமார் 6.5 லட்சம் இயந்திரங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையமே உறுதிப்படுத்தி உள்ளது.
இதுபோன்ற குறைபாடுகளை தேர்தல் ஆணையமே கண்டறிந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் விசாரணை செய்வதை தவிர்ப்பது ஏன்? என்கிற கேள்வி எழுகிறது.
மேலும், EVM இயந்திரங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை செய்ய INDIA கூட்டணி கட்சிகள் சார்பில், கடந்த 2023 டிசம்பர் 19-ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை எதிர்கட்சிகளுக்கு எந்தவிதமான நேரத்தையும் ஒதுக்கி ஆலோசிக்கப்பட வில்லை.
கடந்த 2023 டிசம்பர் 20-ம் தேதி உத்திரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் நகரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 800 EVM இயந்திரங்கள் மின் கசிவால் எரிந்து விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், EVM இயந்திரங்கள் இருக்கும் அறைகளின் மின்சாரம் வழங்கக் கூடாது என்பது விதி. இது குறித்த கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் தற்போது வரை முறையான பதிலை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கடந்த 2023 நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நாளின் முடிவின் போது EVM இயந்திரங்களில் 75% மட்டுமே சார்ஜ் (Charge) இருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளின் போது திடீரென 99 சதவீதமாக மாறி இருந்தது. இது எப்படி சாத்தியம் என்கிற கேள்விக்கும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் சூழலில் தேர்தல் ஆணையம் செவிமடுக்காதது ஏன்? என்கிற கேள்வி முக்கியமாகிறது.
இவ்விவகாரத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது உச்சநீதிமன்றம் எந்த வகையான பதிலைக் கொடுக்கவுள்ளது, எந்த வகையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.