
ஆண்டாள் குறித்த ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்தை குறிப்பிட்டு வைரமுத்து ஒரு கட்டுரை எழுத அது பெரும் பேசுபொருளானது. இதனால் வைரமுத்துவை பழிவாங்கவே சின்மயி களமிறக்கப்பட்டார் என்ற விமர்சனம் உள்ளது. சின்மயி பேச்சின் பின்னால் காவி நிறம் இருப்பதாகவும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதற்கேற்றார் போல் தன் புகார் மீது நீதிமன்றம் சென்று முடிவு தேடாமல், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கவிஞர் வைரமுத்து மீது சேற்றை வாரி இறைத்து வருகிறார் பாடகி சின்மயி.
சின்மயிக்கு பின்னணியில்தான் காவி நிறம் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் கூட, அந்த சமயத்தில் மீடூ மூலமாக பல பெண் பத்திரிகையாளர்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள். அத்தனை பேரின் பின்னணியிலும் காவி நிறம் இருக்கத்தான் செய்கிறதா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு தேடி இன்றைக்கு வரைக்கும் சின்மயி நீதிமன்றம் செல்லவில்லை என்பது ஒரு புறம் இருக்க, தன் மீது அவதூறு செய்கிறார்கள் என்று இப்போது வரைக்கும் வைரமுத்துவும் நீதிமன்றம் செல்லாமல் இருப்பதுதான் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

சின்மயி மற்றும் சுசித்ரா இருவரும் தன்னைப் பற்றின் அதிகம் பேசி வந்த நேரத்தில் மட்டும்,
’’வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது
வக்கிர வார்த்தைகளை
உக்கிரமாய் வீசுவர்;
தொடர்பற்ற மொழிகள் பேசுவர்
பைத்தியம்போல் சிலநேரமும்
பைத்தியம்
தெளிந்தவர்போல் சிலநேரமும்
காட்சியளிப்பர்
தம்மைக் கடவுள் என்று
கருதிக்கொள்வர்
இந்த நோய்க்கு
‘Messianic Delusional Disorder’
என்று பெயர்
அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் அல்லர்;
இரக்கத்திற்குரியவர்கள்;
அனுதாபத்தால்
குணப்படுத்தக் கூடியவர்கள்
உளவியல் சிகிச்சையும்
மருந்து மாத்திரைகளும் உண்டு
உரிய மருத்துவர்களை
அணுக வேண்டும்.’’ என்று சூசகமாக ஒரு பதிவு போட்டு முடித்துக் கொண்டார் வைரமுத்து.
அதன் பின்னர் இந்த விவகாரம் கொஞ்சம் அடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் எழுந்திருக்கிறது.

இளையராஜா – வைரமுத்து இனி இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று ஆகிவிட்டது. இந்நிலையில் தன் அண்ணன் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று வைரமுத்துவை சீண்டி சரியாக ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார் கங்கை அமரன்.
இப்போது அவர் வைரமுத்து – சின்மயி விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். அதுவும் வைரமுத்து மீது கடும் வன்மத்தை கக்கி இருக்கிறார். வைரமுத்து நல்ல கவிஞன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நல்ல மனிதன் கிடையாது என்று சொல்லி, வைரமுத்து மீது சின்மயி சொன்ன குற்றச்சாட்டு உண்மைதான் என்று சொல்கிறார் கங்கை அமரன்.
தக் லைப் மேடையில் ‘முத்தமழை’ பாடலை பாடியது முதல் சின்மயிக்கு ரசிகர்கள் பலம் கூடி வருகிறது. இதை முன்னிட்டு நடந்த ரசிகர்கள் சந்திப்பில்தான் இந்த விவகாரம் மீண்டும் வெடித்திருக்கிறது.
’’அநியாயத்தை கேட்பதற்கு ஒரு பொண்ணு நிக்குறாளே.. அதுக்கு சப்போர்ட் பண்ணுறதுக்கு நான் ரெடி. ஒரு உத்தமமான பொண்ணு சொன்னதை கேட்காத சட்டத்தையும், எதிராக இருக்கும் கட்சிகளையும் எதிர்க்கிறேன். இதுக்கு ஒரு முடிவு வரணும். வைரமுத்து நண்பர்தான். அதுக்காக அவர் செஞ்ச தப்பை மன்னிக்க முடியுமா? வைரமுத்து நல்ல கவிஞன்; நல்ல மனுசன் இல்ல. வைரமுத்துவ இப்படி பேசிட்டேன்னு அரெஸ்ட் பண்ணப் போறாங்களா? ’’பொங்கி எழுந்தார் கங்கை அமரன்
ஒரு கொண்டாட்ட மேடையில் ஏன் இந்த ஒப்பாரி?என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சின்மயி மேட்டரோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. வைரமுத்துவின் வரிகள் மீதும் தன் வன்மத்தை கொட்டி இருக்கிறார் கங்கை அமரன். ‘ராஜபார்வை’ படத்தில் ஹீரோ குருடன். அவன் அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்று பாடுவது சரியா? என்று கேட்கிறார்.
இந்த பாடல்தான் வைரமுத்துவை பெரிதும் கொண்டாட வைத்தது. அந்தப்பாடலில் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது, தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது, தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய், தாவணி விசிறிகள் வீசுகிறேன், இமைகளும் சுமையடி இள மயிலே போன்ற வரிகளால் வைரமுத்து கொண்டாடப்பட்டார். கமல்ஹாசன் கூட இந்த அந்திமழை பொழிகிறது… ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்ற வரிகளில் சொக்கிப்போனதாக சொல்லி இருக்கிறார்.

ஒரு கற்பனைப்பாடலை இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது குறை கூறுவது ஏன்? என்று கேட்கிறார்கள் வைரமுத்து ரசிகர்கள்.
சின்மயிக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு கங்கை அமரன் வந்ததும், அங்கே வைரமுத்து விவகாரத்தை தொகுப்பாளினி கேட்க, அதற்கு கங்கை அமரன் பதில் சொன்னது எல்லாமே திட்டமிட்ட ஒன்று என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளன. கங்கை அமரனை தூண்டிவிட்டு பேசச் சொல்லி இருக்கிறார்கள் என்கின்றனர். அவர்கள் யார்?
சின்மயி மேட்டரோடு விடாமல், வைரமுத்துவின் பாடல் வரிகளை குற்றம் சொல்லி கண்ணதாசனோடு அவரை ஒப்பிட்டு கிண்டலடித்ததும், வைரமுத்து மாதிரி பேசி மிமிக்ரி செய்ததும், வைரமுத்து தற்புகழ் பேசுபவர் என்றும், மேடைக்கு மேடை தற்பெருமைபேசும் கங்கை அமரன் , தான் தற்பெருமை பேசும் ஆள் இல்லை என்று சொன்னதும் வைரமுத்து மீதிருக்கும் ஏதோ ஒரு தனிப்பட்ட ஆதங்கத்தை கொட்டித்தீர்க்கும் செயல் என்றே தெரிகிறது.